யோபு 12: 1 – 25
உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு
யோபு மறுபடியும் பேசுகிறான். நண்பர்களின் குற்றச்சாட்டுகளைக் கேட்டுவிட்டு அவன் அமைதியாய் இருக்க விரும்பவில்லை. தேவன் எப்படிப்பட்டவர் என்பது எனக்குத் தெரியாதா? அவருடைய வல்லமையையும் ஞானத்தையும் மிருகங்களையும், பறவைகளையும், கடலுக்குள் வாழும் மீன் போன்ற பிராணிகளையும், பூமியையும் பார்த்தாலே தெரியுமே என்று யோபு சொல்லுகிறான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். யோபுவுக்கு இவையெல்லாம் தெரியாதது போல அவன் நண்பர்கள் ஏன் உபதேசம் செய்தார்கள்? சில காலத்துக்குமுன், யோபு செல்வத்துடனும் செழிப்புடனும் வாழ்ந்த நேரத்தில் எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகிய மூவரும் யோபுவுக்குக் கர்த்தருடைய ஞானத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று பேசியிருப்பார்களா? ஒருவனுடைய பொருளாதார நிலை ஒருவனுக்கு மற்றவர்களைவிட அதிக புத்தியையும், அறிவையும் கொடுத்துவிடுமோ? பணவசதி குறைந்தவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் நீ எப்படி நடத்துகிறாய்?
ஜெபம்
ஆண்டவரே, யாரையும் அறிவிலும் ஞானத்திலும் குறைந்தவன் என்று தீர்மானித்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.