2 இராஜா 19: 1 – 7
தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை
எல்லா இடங்களுக்கும் ஓடி முடித்தபின், சுய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தபின், வேறே வழியில்லை என்ற நிலையில் எசேக்கியா கர்த்தரை நோக்கிப் பார்க்கிறான். கர்த்தர் அந்நிலையிலும் அவனைக் கைவிடவில்லை. அதுதான் அவருடைய கருணை. அதுதான் அவருடைய நீடிய பொறுமை. அதுதான் அவருடைய அன்பு. அவர் நமக்கு உதவி செய்யும் முறை நம் அறிவுக்கு எட்டாதது. அசீரியாவின் ராஜாவின் உள்ளத்தில் கிரியை செய்து அவன் திட்டங்களை மாற்றிய கர்த்தருக்கு, உன் பிரச்சனையிலிருந்து உன்னை விடுவிப்பது லேசான காரியம். உன் பிரச்சனையைத் தீர்க்கத் தேவையில்லாத இடங்களுக்கெல்லாம் ஓடாதே. மனிதரின் பின் செல்லாதே. ஒருவேளை அப்படிச் செய்து கர்த்தரைப் புறக்கணித்திருந்தாலும் இப்போதாவது அவரைத் தேடு. அவரிடம் மன்னிப்புக் கேள். அவரைத்தவிர உனக்கு உதவக்கூடியது யாருமில்லை என்பதை உணர்ந்துகொள். அவர் உனக்கு இரங்குவார். உன் ஜெபத்தைக் கேட்பார். அவர் மனிதரின் உள்ளத்தில் கிரியைச் செய்வார். அவர் உனக்குத் தேவையானதைச் செய்வார்.
ஜெபம்
ஆண்டவரே, எனக்கு என்ன தேவை என்பது உமக்குத் தெரியும். என் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலைத் தாரும். ஆமென்.