2 இராஜா 21: 10 – 18
பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்
யுதாவில் மனாசேவுக்கு ஒப்பாகப் பொல்லாப்பைச் செய்த ராஜா ஒருவரும் இல்லை. கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் கொண்டு உரைத்ததை அவன் அசட்டைப் பண்ணினான். கர்த்தர் தமது பிள்ளைகளை ஒழுக்கப்படுத்தி மறுபடியும் அவர்களைத் தம் பக்கம் திருப்பும்படி உபயோகிக்கும் பல முறைகளைச் சரித்திரத்தில் பார்க்கிறோம். நாட்டில் ஏற்படும் பஞ்சம் கர்த்தர் உபயோகிக்கும் ஒரு கருவி. போரில் தோல்வியைக் கொடுப்பது இன்னொரு கருவி. கொள்ளைநோயும் ஒரு கருவிதான். பல தலைமுறை யூதா மக்களும், மனாசேயும் தொடர்ந்து செய்து வந்த அட்டூழியங்கள் நியாயத்தீர்ப்புக்கு நேராக அவர்களைக் கொண்டு போய் நிறுத்தியது. கர்த்தர் அவர்களைப் பகைஞரின் கையில் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டார். கழுவிய பாத்திரத்தைத் தண்ணீர் இல்லாதபடி துடைப்பதைப் போல யூதாவைத் துடைத்து விடுவதாகக் கர்த்தர் சொன்னார். சிலர் மரித்துப் போவார்கள்; சிலர் கைதிகளாக பாபிலோனுக்குக் கொண்டு போகப்படுவார்கள். தெற்கு சாம்ராஜியம் துடைக்கப்படும்.
ஜெபம்
ஆண்டவரே, மனாசேயும் யூதாவின் மக்களும் சென்ற பாதையில் ஒருபோதும் நான் போய்விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.