1 நாளா 1: 1 – 27
ஆதாம் முதல் ஆபிரகாம் வரை

நாளாகமம் புத்தகத்தில் பெயர்களுக்குப் பின் பெயர்களாகக் கொடுக்கப்பட்டிருப்பதை வாசிக்கும்போது நமக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதுவும் நமக்கு வாயில் நுழையாத பெயர்கள்! ஆனால் காரணம் இல்லாமல் எந்த ஒரு பகுதியும் வேதாகமத்தில் இடம்பெறவில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நமக்குப் புரியாமல் இருப்பதாலோ அல்லது சலிப்பைக் கொடுப்பதாலோ அது தேவையில்லை என்று நாம் முடிவு செய்துவிடக்கூடாது. இன்று வாசித்த பகுதியில் கர்த்தர் உருவாக்கின முதல் மனிதனான ஆதாம் முதல் ஆபிரகாம் வரையுள்ள தலைமுறைகளைக் குறித்து பார்க்கிறோம். இந்த பகுதியிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் முதலாவது பாடம், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சம்பவங்கள் எதுவும் கட்டுக்கதைகளோ அல்லது புராணக்கதைகளோ அல்ல என்பது. அவை அனைத்தும் சரித்திரப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட உண்மைகள். ஆபிரகாம் நோவாவின் குமாரனான சேம் என்பவனின் வம்ச வழியில் வந்தவன் என்பதையும் நாம் அறிந்துகொள்ளுகிறோம்.
ஜெபம்
ஆண்டவரே, வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சரித்திர உண்மைகள் என் விசுவாசத்தை உறுதிப் படுத்துவதாக. ஆமென்.