நெகே 7: 1 – 3
உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த . . .
எருசலேமின் காவல் விசாரணைக்காரரைத் (தலைவனைத்) தெரிந்தெடுப்பதற்கு இரண்டே தகுதிகளைத் தான் நெகேமியா முக்கியமாகக் கருதினான். உண்மையுள்ளவன், கர்த்தருக்குப் பயந்தவன். உண்மையுள்ளவர்களை எந்த சூழ்நிலையிலும் நம்பலாம். அவர்களை நம்பி எந்த பொறுப்பை வேண்டுமானாலும் கொடுக்கலாம். கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவர்கள், கர்த்தருடைய பார்வையில் எது முக்கியமோ, எது சரியோ அதையே செய்வார்கள். ஒருவேளை தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு உன்னிடம் இருந்தால் (எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி), இந்த இரண்டு தகுதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். படிப்பு, பேச்சுத் திறன், நிர்வாகத் திறன் போன்ற மற்றெல்லா தகுதிகளும் மிக நேர்த்தியாக இருந்தாலும், ஒருவனிடம் உண்மையும் தேவ பயமும் இல்லாவிட்டால் அவனைத் தெரிந்தெடுக்க வேண்டாம். நம்முடைய திருச்சபைகளில் பலவிதமான பொறுப்புகளை எடுக்க விரும்புகிறவர்களுக்கும் அதே தகுதிகள் தான் அவசியம்.
ஜெபம்
ஆண்டவரே, உண்மையும் தேவ பயமும் உள்ளவர்களை மாத்திரம் திருச்சபையின் தலைமைப் பொறுப்புகளுக்குத் தெரிந்தெடுக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.