அப் 1: 1- 11
எப்படி வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த வாக்குத்தத்தம் இது. முதலாம் வருகையைக் கொண்டாடிய நாம் இயேசுவின் இரண்டாவது வருகையை மறந்துவிடக்கூடாது. ஒரு கன்னிகை பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானது எப்படி நம்முடைய அறிவுக்கு எட்டாததோ, அதே போல இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த பல தீர்க்கதரிசனங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். எது எப்போது நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வாக்குத்தத்தம் நிறைவேறுவது நிச்சயம். இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாவது வருகைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. முதல் வருகையில் அவர் ஏழ்மையின் கோலத்தில் ஒரு பாலகனாக வந்தார். இரண்டாவது வருகையில் மகிமையின் ராஜாவாக வருவார். முதல் வருகையில் மனிதரை இரட்சிக்கும்படி சிலுவையில் மரிக்க வந்தார். இரண்டாம் வருகையில் உலகத்தை நியாந்தீர்க்கும் நியாதிபதியாக வருவார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நீ தயாராக இருக்கிறாயா? விளக்குக்கு எண்ணெய் வைத்திராத ஐந்து கன்னிகைகள் போல இருந்துவிடாதே. கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவை விட்டுவிடாதே.
ஜெபம்
ஆண்டவரே, ஒரு நிமிடம்கூட அசந்துவிடாமல் எப்போதும் உம் வருகைக்குத் தயாராக இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.