மீகா 2: 1 – 5
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கையின்மேல் பொல்லாப்புச் செய்ய எத்தனம்பண்ணி
கொடிய பாவங்களும், தீய செயல்களும் யோசித்துத் திட்டமிட்டே செய்யப்படுகின்றன. அவைகள் திடீரென்று நிகழ்ந்துவிடுவதில்லை. ஒருவனுடைய எண்ணங்களும் திட்டங்களும் அவனுடைய உள்மனதின் குணாதிசயத்தைப் பிரதிபலிக்கின்றன. (A man’s real character is reflected in his thoughts and plans.) இரவு நீ படுக்கையில் படுத்தவுடன், எப்படிப்பட்ட எண்ணங்கள் உன் மனதில் ஓடுகின்றன? பேராசையும், இச்சையும், பிறரை ஒடுக்கியாவது என்னுடைய விருப்பங்களை அடைந்துவிட வேண்டும் என்ற வேகமும் உன் மனதில் ஓடிக்கொண்டிருந்தால் பகலில் உன் செயல்கள் அவற்றை நிறைவேற்றும். இனிமையான எண்ணங்களும், பிறருக்கு உதவவேண்டும் என்ற வாஞ்சையும் உன் உள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தால், உன் செயல்களும் அவற்றை பிரதிபலிக்கும். நாம் கவனிக்கவேண்டிய காரியம் இன்னொன்றும் இருக்கிறது. பிறருக்கு விரோதமாகப் பொல்லாப்பு செய்கிறவர்கள் தங்கள் கையில் வல்லமை (அல்லது அதிகாரம்) இருக்கிறது என்று நினைத்து அப்படிச் செய்கிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் உனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்திருந்தால் அவற்றை தவறாகப் பயன்படுத்தாதே.
ஜெபம்:
ஆண்டவரே, இரவிலும் நான் தனிமையில் இருக்கும் நேரங்களிலும் என் எண்ணங்களைத் தூய்மையாகக் காத்துக் கொள்ளும். ஆமென்.