சகரியா 12: 1 – 9
கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல் முதல் இரட்சிப்பார்
இன்று வாசித்த பகுதி எருசலேமுக்கு விரோதமாக நடக்கப் போகும் ஒரு பெரிய யுத்தத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் என்று சொல்லுகிறவர்கள் உண்டு. வேறு சிலரோ இது வெளிப்படுத்தின விசேஷத்தில் (வெளி 16: 14 முதல்) சொல்லப்பட்டுள்ள அர்மகெதோன் இறுதி யுத்தத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் என்று சொல்லுகிறார்கள். எதுவாக இருந்தாலும், தீமையும் அட்டூழியமும் கொடுமையும் முற்றிலும் அகற்றப்படும் நாள் ஒன்று விரைவில் வருகிறது. யார் முதலில் இரட்சிக்கப்படுவார்கள், யார் கடைசியில் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை முடிவு செய்கிறவர் கர்த்தரே என்பது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு உண்மை. இரட்சிப்பின் நற்செய்தியைக் குறித்துப் பேசி அநேக வருடங்கள் தொடர்ந்து ஜெபித்தும் என் நண்பன் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளவில்லையே என்று வருந்துகிறாயோ? கர்த்தருடைய சித்தத்துக்காகக் காத்திரு. விளைவைக் குறித்து கவலைப்படாமல் கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து எல்லாரிடமும் அறிவிப்பது மாத்திரம்தான் நம் வேலை.
ஜெபம்:
ஆண்டவரே, உமது சித்தத்தின்படி, நீர் குறித்துள்ள நாளில் என் நண்பர்களையும் உம்முடைய மந்தையில் சேர்த்துக்கொள்ளும். ஆமென்.