சங் 27: 1 – 6
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
தாவீது ராஜாவுக்குக் கர்த்தருடைய ஆலயத்தின்மீது அதிக வாஞ்சை. கர்த்தருக்கென்று ஒரு பிரமாண்டமான ஆலயத்தைக் கட்ட ஆசைப்பட்டார். கர்த்தரோ, தாவீது ஆலயத்தைக் கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார் (1 நாளாகமம் 28:3). ஆலயத்தைக் கட்டுவதற்கு வேண்டிய planஐயும், அதற்குத் தேவையான பொன், வெள்ளி, இரும்பு, வெண்கலம், மரம், இரத்தினம், கிடைப்பதற்கரிய வர்ணக்கற்கள் (precious stones) போன்ற பலவித பொருட்களையும் தயார் செய்த தாவீது ராஜா, எல்லாவற்றையும் தன் மகனாகிய சாலொமோனிடம் ஒப்படைத்துவிட்டு கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். 1 நாளாகமம் 28, 29ம் அதிகாரங்களை வாசியுங்கள். தாவீது ராஜாவின் கீழ்ப்படிதலின் விளைவு என்ன? கர்த்தரை ஆராதிப்பதற்கென்று அழிந்து போகக்கூடிய ஒரு ஆலயக் கட்டிடத்தைக் கட்ட விரும்பிய தாவீதின் மூலமாக, உலகெங்கும் பல தலைமுறைகளாகக் கர்த்தரைத் துதிக்க உபயோகப்படுத்தப்படும் அழிவில்லாத சங்கீதங்கள் கிடைத்துள்ளன. உன்னுடைய வாஞ்சை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது உன் ஆண்டவருடைய சித்தமா என்பதைத் தெரிந்துகொள்ளாமல் செயல்படாதே.
ஜெபம்:
ஆண்டவரே, நான் நினைப்பதைவிட பெரிய காரியங்களை எனக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருப்பதற்காக நன்றி சுவாமி. ஆமென்.