சங் 39: 1 – 3
யாக் 3: 3 -10
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு
39ம் சங்கீதத்தின் முதல் மூன்று வசனங்களைத் தாண்டி இன்று போக முடியவில்லை. வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த தாவீது ராஜாவும், யாக்கோபு அப்போஸ்தலனும் நாவைக் குறித்து என்ன சொல்லுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். நமது உடலிலுள்ள உறுப்புகளில் மிகவும் சிறிதான நாவினால் நாம் செய்கிற பாவங்கள் ஏராளம். பிறரைக் குறித்து இழிவாகப் பேசுவது, பிறரைப் புண்படுத்துவது, பெருமையாய்ப் பேசுவது, சபிப்பது, பொய் பேசுவது போன்றவைகள் அவற்றில் சில. நாம் நம் நாவை அடக்குவது மிகவும் அவசியம். மவுன விரதத்தால் நாவைக் கட்டி வைக்கலாம். ஆனால் அதே மவுன விரதம் நலமானதையும் பேசவிடாமல் தடுப்பதால் தன்னுடைய துக்கம் அதிகரித்தது என்று தாவீது ராஜா கூறுகிறார். ஆகையால் நாவினால் பாவம் செய்யாமலிருக்க சிறந்த வழி, அந்த நாவினால் ஆண்டவரைத் துதித்துக்கொண்டும், அவரிடம் விண்ணப்பங்களை ஏறெடுத்துக் கொண்டிருப்பதும்தான்.
ஜெபம்:
ஆண்டவரே, என் நாவு வீணான காரியங்களில் ஈடுபடாமல் உம்மையே துதித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.