சங் 48: 1 – 14
அதுவே மகாராஜாவின் நகரம்
சீயோன் பர்வதம் என்பது எருசலேமைக் குறிக்கும். எருசலேமில் தான் தேவனுடைய ஆலயம் இருந்தது. ஆகையால்தான் அது மகாராஜாவின் நகரம் என்று அழைக்கப்பட்டது. எருசலேம் தேவனுடைய பிரசன்னத்தின் மையமாகக் கருதப்பட்டது. ஏசாயா 2:2, கடைசி நாட்களில் எல்லா ஜாதிகளும் அங்கு ஓடி வருவார்கள் என்றும், விசுவாசிகள் எல்லாரும் தேவனுடைய பிரசன்னம் இருக்கும் இடமாகிய எருசலேமில் கூடுவார்கள் என்றும் கூறுகிறது. எட்டாம் வசனத்தில், தேவன் என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார் என்று சொல்லப்பட்டிருந்தும், எருசலேம் இந்த சங்கீதம் எழுதப்பட்ட நாட்கள் முதல் அநேக முறைகள் அழிக்கப்பட்டுவிட்டது. ஆகையால் இந்த சங்கீதம் குறிப்பிடும் எருசலேம், வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் புதிய எருசலேம் தான் என்று கருதப்படுகிறது. தீர்க்கதரிசன வசனங்கள் பலவற்றை அவை நிறைவேறும்போதுதான் புரிந்துகொள்ள முடியும். ஒன்று மட்டும் நமக்கு நிச்சயமாகத் தெரியும். எருசலேம் ஆண்டவர் தங்கியிருக்கும் இடம். உன் இருதயம் எருசலேமாக இருக்கிறதா?
ஜெபம்:
ஆண்டவரே, என் உள்ளத்தில் எப்போதும் தங்கியிரும். ஆமென்.