மத் 13: 24 – 43
இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள்
கோதுமையையும் களைகளையும் அறுப்பு மட்டும் வளர விடுகிறார் நம் ஆண்டவர். சோதோம் கொமோரா பட்டணத்தை அழிக்க முடிவு செய்த கர்த்தரிடம் துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ என்று ஆபிரகாம் கேட்டான். பத்து நீதிமான்கள் இருந்தால்கூட அப்பட்டணத்தை அழிக்க மாட்டேன் என்று கர்த்தர் சொன்னார். அதுதான் அவருடைய இரக்கம்; அதுதான் அவருடைய கிருபை. பாவத்தில் மூழ்கியிருப்பவர்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் நன்றாக வாழ்கிறார்களே! ஆண்டவர் அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டு ஏன் சும்மாயிருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கு இது ஒரு விடை. பாவிகளுக்கு இது கிருபையின் காலம். அறுப்பு நாள் வெகு தொலைவில் இல்லை. அறுப்பு நாளில் (அதாவது நியாயத்தீர்ப்பு நாளில்) துன்மார்க்கரும், நீதிமான்களும் பிரித்தெடுக்கப்படுவார்கள். துன்மார்க்கர் சுட்டெரிக்கும் அக்கினியில் போடப்படுவார்கள். கிருபையின் காலத்தில் எத்தனை பேரை அழிவிலிருந்து காப்பாற்ற முடியுமோ, அத்தனை பேரையும் காப்பாற்று. அறுப்பின் எஜமான் உனக்காகக் காத்திருக்கிறார்.
ஜெபம்:
ஆண்டவரே, அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் மக்களுக்கு உம்மைக் காட்ட என்னையும் உபயோகித்தருளும். ஆமென்.