கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் திருநாள்
யோவான் 20: 1- 18
என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் …. ஏறிப்போகிறேன்
இயேசுவின் காலியான கல்லறையைக் கண்டதும் பேதுருவும் மற்ற சீஷன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் யோவனும் திரும்பிப் போய்விட்டார்கள். மகதலேனா மரியாளுக்கோ திரும்பிப் போக மனதில்லை. அவளோ அழுதுகொண்டு அங்கேயே இருந்தாள். அவளுக்கு உயிர்த்தெழுந்த இயேசுவின் முதல் தரிசனம் கிடைத்தது. அது மாத்திரமல்ல, அவர் சீடர்களுக்குச் சொல்லியனுப்பும் செய்தியைக் கவனியுங்கள். முதலாவதாக சீடர்களைத் தம்முடைய சகோதரர்கள் என்று குறிப்பிடுகிறார். இரண்டாவதாக தம்முடைய பிதா, சீடர்களுக்கும் பிதா என்பதைத் திட்டவட்டமாக சொல்லுகிறார். தம்முடைய தேவன்தான் சீடர்களுக்கும் தேவன் என்றும் சொல்லுகிறார். பிதாவாகிய தேவன் நமக்கும் பிதா. இயேசு எந்த தேவனுடைய பிரசன்னத்துக்கு ஏறிச் சென்றாரோ அங்கேதான் நாமும் போகப்போகிறோம். இதைவிட மேலான பாக்கியம் நமக்கு என்ன இருக்க முடியும்?
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய பிரசன்னத்துக்கு வரும் நாளுக்காக நான் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் மீது கிருபையாயிரும். ஆமென்.