லூக்கா 5: 27 – 39
லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்து பண்ணினான்
லேவி ஒரு ஆயக்காரன். ஆயக்காரர் அக்காலத்திலே தீண்டத்தகாத மக்களாகக் கருதப்பட்டனர். வேதபாரகர், பரிசேயர் போன்றவர்கள் ஆயக்காரரோடு எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட ஆயக்காரன் ஒருவனை இயேசு அழைக்கிறார். ஆயக்காரனாகிய லேவிக்கு மிகுந்த மகிழ்ச்சி. எல்லாவற்றையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவுக்குப் பின் சென்று விடுகிறான். “எல்லாவற்றையும் விட்டு” என்கிற வார்த்தைகளை அடிக்கடி வேதாகமத்தில் பார்க்கிறோம். லேவி தன் பூலோக சொத்துக்களையெல்லாம் உதறிவிட்டு, மேலோக சொத்துக்களை நாடி சென்று விட்டான். அது மாத்திரமல்ல, இயேசுவை கௌரவிக்கவும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் லேவி ஒரு பெரிய விருந்து ஏற்படுத்தினான். அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நீ அனுபவித்திருக்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, நீர் என்னைத் தெரிந்து கொண்டதற்காக நன்றி. உம்மோடு உறவாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நான் தொடர்ந்து அனுபவிக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.