லூக்கா 9: 18 – 27
என் வார்த்தைகளைக் குறித்து எவன் வெட்கப்படுகிறானோ
இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் மட்டும் காண்கிறவன் அவரை மேசியா என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அவன் ஆண்டவரைக் குறித்தும் அவருடைய வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுகிறான். இயேசு மரணத்தை வென்றதையும், அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலையும் அறிந்து, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றவன், அவர் வார்த்தைகளைக் குறித்து வெட்கப்படுவதில்லை. இன்றைய விஞ்ஞான உலகின் அறிவு வளர்ச்சி, ஆண்டவரை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்து விட்டது. இயேசுவின் வார்த்தைகளைக் குறித்து வெட்கப்படுகிறவர்களின் எண்ணிக்கைப் பெருகிக்கொண்டே வருகிறது. கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்கள் அடங்கிய புத்தகங்களை வாசிப்பதும், சுவிசேஷத்தை அறிவிப்பதும், அநேகருக்கு அநாகரீகமாகத் தோன்றுகிறது. கிறிஸ்துவின் வார்த்தைகளைக் குறித்து நாம் வெட்கப்பட வேண்டாம். அவை நித்திய ஜீவ வசனங்கள்.
ஜெபம்:
ஆண்டவரே, உமது வார்த்தைகளைப் பற்றிக் கொள்ளவும், அவைகளைப் பிறருக்கு அறிவிக்கவும் வேண்டிய வாஞ்சையை எனக்குத் தாரும். ஆமென்.