யோவான் 13: 31 – 38
நான் உங்களில் அன்பாயிருந்தது போல
அன்பாயிருங்கள் என்று மாத்திரம் சொல்லியிருந்தால் எளிதாக இருந்திருக்கும். அன்பின் அளவை நாமே நம் விருப்பப்படி நிர்ணயித்திருப்போம். ஆனால், நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதுதான் கட்டளை. இயேசு கிறிஸ்துவின் அன்புதான் அளவுகோல். அந்த அன்பின் ஆழத்தையும் சகிப்புத்தன்மையையும் உணருகிறோமா? அவருடைய அன்பிற்கு பாத்திரராக நாம் நடந்து கொண்டதேயில்லையென்றாலும் நம்மை நேசிக்கிறாரே, அந்த அளவுகோலை வைத்து நம் அன்பை அளந்து பார்க்க வேண்டும். நமக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் யாராவது இருந்தால் நாம் எந்த அளவுக்கு அவர்களை நேசிக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். (ரோமர் 12:20)
ஜெபம்:
ஆண்டவரே, எல்லா மனிதரும் உம்முடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து அவர்களிடம் அன்பு செலுத்த எனக்கு சுத்தமான மனதைத் தாரும். ஆமென்.