Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 03, 2026

சங்கீதம் 57:1-11 

“உறவும் பகையானால்…” 

சீப் வனாந்தரம். யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தாவீது, தன் சொந்த இரத்த உறவுகளான யூதா ஜனங்களின் மத்தியில் பாதுகாப்பைத் தேடி ஒளிந்திருந்தான். ஆனால் சீப் ஊர் மக்கள் ரகசியமாகச் சவுலிடம் சென்று, தாவீதைக் காட்டிக்கொடுத்தார்கள் (1 சாமுவேல் 23:19). 

அந்நியன் அடித்தால் வலிக்காது; அரவணைக்க வேண்டிய சொந்தங்களே காட்டிக்கொடுக்கும்போது ஏற்படும் வலி இருக்கிறதே, அது மரணத்தை விடக் கொடியது! இப்படிப்பட்ட துரோகத்தின் உச்சத்தில் தாவீது மனதளவில் உடைந்து போயிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? தாவீதின் கண்கள் கலங்கினவா? இல்லை. அவன் பார்வை மனிதனை விட்டுத் தேவனை நோக்கித் திரும்பியது. “தேவனே என் சகாயர்” என்று அவன் உறுதியாக நின்றான். நம் வாழ்க்கையிலும் சில நேரம் நாம் நம்பியவர்கள் ஆபத்து நேரத்தில் அந்நியரைப் போல முகம் திருப்பிக்கொள்ளலாம். அப்போது சோர்ந்து போகாதீர்கள். ஏனென்றால், மனிதர்களின் ஆதரவு விலகும்போதுதான், தேவனின் ‘தாங்கும் கரம்’ எவ்வளவு வலிமையானது என்பது நமக்கு விளங்கும். கை விடுகிறவர்களைப் பார்க்காதீர்கள்; கை கொடுக்கிறவரைப் பாருங்கள். 

ஜெபம்:

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே, மனித ஆதரவு அற்றுப்போகும் நேரத்திலும், உமது தாங்கும் கரத்தில் நான் பாதுகாப்பாய் இளைப்பாறுவேன். ஆமென்.

Exit mobile version