Site icon Puthuyir

காலைத் தியானம் – மார்ச் 28, 2026

சங்கீதம் 138:1–8

“தாழ்மையில் கிருபை” 

தாவீது இப்போது ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி. அவனைச் சுற்றிலும் புகழ்ச்சி மொழிகள்; கைகட்டி நிற்கும் சேவகர்கள். பொதுவாக அதிகாரம் வந்தால் பழைய நினைவுகள் மறைந்துவிடும். ஆனால், அந்த நிலையிலும் தேவனை மறவாமல், தாவீது தன்னையே தாழ்த்தி எழுதிய சங்கீதம் இது. 

எத்தனையோ ராஜாக்கள் கர்வத்தினால் அழிந்து போனார்கள். ஆனால் தாவீது அப்படிப் பெருமை கொள்ளவில்லை. அவன் “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்” (வசனம் 6) என்று அறிந்திருந்தான். தான் தன்னை எவ்வளவு தாழ்த்துகிறானோ, அவ்வளவு தூரம் தேவன் தன்னை நெருங்கி வருகிறார் என்று கண்டுகொண்டான். உயரத்தில் இருக்கும்போது கர்வப்படாமலும், தாழ்வில் இருக்கும்போது சோர்ந்து போகாமலும் இருக்க தாவீதுக்கு உதவியது இந்த நம்பிக்கைதான். “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (வசனம் 8) என்பது  ஒரு சோம்பேறியின் வாசகம் அல்ல; இது தன் சுயபலத்தை நம்பாத ஒரு விசுவாசியின் சரணாகதி. நம் வாழ்வின் முடிச்சுகளை நாம் அவிழ்க்கத் தேவையில்லை; அதை அவிழ்க்க ஒரு கை மேலே இருக்கிறது என்று நம்பி நடப்பதே விசுவாச வாழ்க்கையின் வெற்றி நடை.

ஜெபம்:

உயர்ந்தவரே, என் வாழ்வின் வெற்றிகள் என்னைத் தலைகனமாக்காதபடியும், என் தோல்விகள் என்னைத் துவளச் செய்யாதபடியும், உம்மையே சார்ந்து வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

Exit mobile version