Site icon Puthuyir

காலைத் தியானம் – ஏப்ரல் 02, 2026

சங்கீதம் 41:1–13

“தூக்கப்பட்ட குதிங்கால்” 

எருசலேமில் ஒரு மேல் அறை. மங்கிய விளக்கொளி. பஸ்கா பண்டிகையின் இராப்போஜனம் நடந்துகொண்டிருக்கிறது. இயேசு தம் சீஷர்களோடு பந்தியிருக்கிறார். ஒருபுறம் அன்பின் உச்சக்கட்டமாக, இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டு, தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார். மறுபுறம், ஒரு ஆழமான வலி அவர் நெஞ்சை அழுத்துகிறது.

தாவீது ஒரு காலத்தில் தன் ஆத்தும நண்பனின் துரோகத்தை நினைத்து, “நான் நம்பினவனும், என் அப்பஞ்சாப்பிட்டவனுமாகிய மனுஷனும், தன் குதிங்காலை எனக்கு விரோதமாகத் தூக்கினான்” (வசனம் 9) என்று சோகத்தில் பாடினான். நூற்றாண்டுகள் பல கழித்து, அதே வார்த்தைகளை இயேசு அந்த இராப்போஜனப் பந்தியிலே, பெரிய வியாழன் இரவில் உச்சரிக்கிறார் (யோவான் 13:18). யூதாஸ் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், எந்தக் குதிங்கால் தமக்கு விரோதமாகத் தூக்கப்படப் போகிறதோ, அந்தப் பாதங்களையும் தம் கரங்களால் கழுவினாரே, அதுதான் கல்வாரியின் அன்பு! நாம் நேசித்தவர்கள், நம்மோடு உணவைப் பகிர்ந்தவர்களே நமக்குத் துரோகம் செய்யலாம். அந்த வலி உங்களை முடக்கிப்போடலாம். ஆனால், மனிதர்கள் உங்களுக்கு விரோதமாகக் குதிங்காலைத் தூக்கும்போது, கர்த்தர் உங்களைத் தம் கரங்களில் தூக்கிக்கொள்வார், தம்முடைய சமுகத்தில் நிலைநிறுத்துவார்.

ஜெபம்:

கிருபை நிறைந்தவரே, நான் நம்பினவர்கள் எனக்குத் துரோகம் செய்யும்போது வரும் வலியை நீர் அறிவீர். நான் கசப்படையாமல், உமது கல்வாரி அன்போடு அவர்களை மன்னிக்கவும், உமது தாங்கும் கரங்களில் நான் இளைப்பாறவும் எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

Exit mobile version