புதன் ஜெபங்கேட்கும் தேவன்!
27-05-2026
2 நாளாகமம் 6:22–42
தேவாலயத்தில் முழங்கும் ஜெபங்கள்! பஞ்சமோ, கொள்ளைநோயோ, போரோ வரும்போது, ஒட்டுமொத்த தேசமும் இந்த ஆலயத்தை நோக்கித் தன் கரங்களை ஏந்தும் என்று சாலொமோன் தீர்க்கதரிசனமாய் உரைக்கிறான். பலிபீடத்தின் முன்னே கண்ணீரும் கம்பலையுமாக மனிதர்கள் வந்து நிற்பார்கள். உலகத்தின் கண்கள் மனிதனின் கண்ணீரையும், அவன் விரிக்கும் கரங்களின் நீளத்தையுமே அளக்கின்றன. ஆனால் சர்வவல்லவரோ, மனிதனின் வெளிவேஷங்களைக் கிழித்தெறிந்துவிட்டு, இருதயத்தின் அந்தரங்கத்தை ஊடுருவிப் பார்க்கிறார்! தங்கம் இழைக்கப்பட்ட தேவாலயத்திற்குள் நின்றாலும், கள்ளத்தனம் நிறைந்த இருதயத்தை தேவனிடமிருந்து ஒருபோதும் மறைக்கமுடியாது. தேவன் உன்னிடம் கேட்பது ஒன்றுதான்; எந்தப் போலித்தனமும் இன்றி, உன்னை உள்ளபடியே நேர்மையாய் அவரிடம் அர்ப்பணிப்பதைத் தான் அவர் கேட்கிறார். அப்படி சரணடையும்போது, நீ எப்படிப்பட்ட இருண்ட பாதாளத்தில் இருந்தாலும் உன்னைக் காக்க வல்லவர் அவர் ஒருவரே!
ஜெபம்: தேவனே, என் உள்ளத்தை உள்ளபடியே உமது சந்நிதியில் ஊற்றுகிறேன். என் ஜெபத்திற்குச் செவிசாய்த்து என் சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டருளும். ஆமென்.