காலைத் தியானம் – செப்டம்பர் 03, 2026

வியாழன்                       பயத்தின் நடுவே ஒலித்த வாக்குத்தத்தம்

03-09-2026

2 இராஜாக்கள் 16:5–6; 

ஏசாயா 7:1–17

ரேசீனும் பெக்காவும் கூட்டணி அமைத்து எருசலேமுக்கு எதிராக வந்தபோது, ஆகாஸின் இதயமும் ஜனங்களின் இதயமும் காற்றில் அசையும் செடிகளைப் போல குலுங்கின. அப்போது தேவன் ஏசாயாவை அனுப்பி, அச்சுறுத்தும் இரு ராஜாக்களையும் “புகைகிற இரண்டு விறகுக்கட்டைகள்” என்று விவரித்தார். 

மனிதக் கண்களுக்கு அவர்கள் பேராபத்தாகத் தெரிந்தாலும், தேவனுடைய ஆளுகைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அதைவிட ஆழமான ஒரு வாக்குத்தத்தமும் அங்கே ஒலித்தது: இம்மானுவேல் – “தேவன் நம்மோடு இருக்கிறார்”. ஆகாஸ் அந்த நம்பிக்கையில் நிலைக்காமல் அரசியல் பாதுகாப்பைத் தேடினான். ஆனால் ’இம்மானுவேல்’ வாக்குத்தத்தம் ஆகாஸின் காலத்தைத் தாண்டிச் செல்கிறது; மத்தேயு 1:23ல் அது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது.

கிறிஸ்தவ விசுவாசத்தின் மையம் “எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்பதல்ல; “என் பிரச்சனையின் நடுவிலும் தேவன் என்னை விட்டுவிடவில்லை” என்பதே. பயம் உன்னை அவசரமான குறுக்குவழிகளுக்குத் தள்ளும்போது, முதலில் உன்னோடு இருப்பவர் யார் என்பதை நினைவுகொள்.

ஜெபம்: ஆண்டவரே, சூழ்நிலைகள் என்னை அச்சுறுத்தும்போது பயத்தின் அடிப்படையில் முடிவு எடுக்காமல், கிறிஸ்துவில் நீர் என்னோடு இருப்பதைக் நினைத்து விசுவாசத்தில் நிலைக்க எனக்குப் பெலன் தாரும். ஆமென்.