புதன் இருண்ட பாதாளத்தில் ஓர் ஜெபபீடம்!
12-08-2026
யோனா 2:1–10
கடலின் ஆழம்; பாசிகளால் சுற்றப்பட்ட கழுத்து; மரணத்தின் வாசலில் யோனா. அங்கே எந்த ஆலயமுமில்லை, ஆசாரியனுமில்லை. ஆனால், மீனின் இருண்ட வயிற்றையே தன் ஆராதனைத் தலமாக மாற்றுகிறான்! ஒளியே இல்லாத அந்தப் படுபாதாளத்திலிருந்து அவன் எழுப்பிய ஒற்றைக் கதறல், சர்வவல்லவரின் செவிகளைத் தொட்டது.
உனது சூழ்நிலை எவ்வளவு இருண்டதாகவும், மூச்சுத்திணற வைப்பதாகவும் இருக்கலாம். மனிதர்கள் உன்னைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் சற்றும் கலங்காதே! இருண்ட பாதாளங்களைக்கூட உனக்கான விடுதலையின் பலிபீடமாக மாற்றும் வல்லமை இயேசுவின் கல்வாரி இரக்கத்திற்கு உண்டு! நீ இருக்கும் இடத்திலிருந்தே முழு உள்ளத்தோடு அவரை நோக்கிக் கூப்பிடு; பாதாளத்தின் கதவுகளை உடைத்து உன்னை மீட்கும் இரட்சிப்பு கர்த்தருடையதே!
ஜெபம்: சர்வவல்லவரே, என் சூழ்நிலைகள் என்னைப் பாதாளத்தில் தள்ளினாலும், அங்கே உம்மை நோக்கிக் கதறும் விசுவாசத்தை எனக்குத் தந்து என்னை விடுவித்தருளும். ஆமென்.
