வெள்ளி பைத்தியக்காரனின் பட்டாபிஷேகம்!
24-07-2026
2 இராஜாக்கள் 9:1–13
யெகூவின் அபிஷேகம் மனித மூளைக்குப் புலப்படாத பரலோகத்தின் ஒரு அசாத்தியத் திருப்பம். யெகூவை அபிஷேகம் செய்ய வந்த அந்த வாலிபனை, “அந்தப் பைத்தியக்காரன் எதற்கு வந்தான்?” என்று ஏளனமாய்க் கேட்டார்கள் சக தளபதிகள். ஆனால், அதே ‘பைத்தியக்காரன்’ உரைத்த தேவ செய்தியைக் கேட்ட மறுகணமே, தங்கள் வஸ்திரங்களைக் கழற்றிப் படிகளில் விரித்து, “யெகூவே ராஜா!” என்று அவர்கள் எக்காளம் ஊதியதுதான் வரலாற்றின் மாபெரும் முரண்! உலகத்தின் பார்வைக்குத் தேவனுடைய அழைப்பும் அவர் அனுப்பும் தூதுவர்களும் எப்போதும் ‘பைத்தியக்காரர்களாகவே’ தெரிவார்கள். ஆனால், அந்தப் பைத்தியக்காரத்தனத்திற்குள் தான், இருளின் கோட்டைகளைத் முறியடிக்கும் சர்வவல்லவரின் அபாரமான வல்லமை ஒளிந்திருக்கிறது.
உலகத்தின் பார்வையில் தேவனுடைய வார்த்தையும் அவருடைய அழைப்பும் பல நேரங்களில் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். ஆனால், மனிதர்களின் ஏளனங்களைக் கடந்து தேவனுடைய அழைப்பிற்கு நீங்கள் முற்றுமாய்க் கீழ்ப்படியும்போது, அது அசைக்க முடியாத இருளின் சாம்ராஜ்யங்களையே தலைகீழாய்ப் புரட்டிப்போடும் ஈடில்லா வல்லமையாக உருவெடுக்கும்!
ஜெபம்: சர்வவல்லவரே, அந்தரங்கத்தில் நீர் எனக்குத் தரும் அபிஷேகம், எனக்கு விரோதமான இருளின் கோட்டைகளைத் தகர்த்து என்னை என்றென்றும் வெற்றியாளனாய் நிலைநிறுத்தட்டும். ஆமென்.
